வேண்டுகோள்
வேண்டுகோள்
என்மூளையே....
உனை நான் கண்டதில்லை
எனை நாளும் நீதான் இயக்கினாய்...
இயக்குகிறாய்!
உன் கட்டளையின்றி
என் கண்களும் இமைக்காது!
உடல் அணுவும் அசையாது
என் நினைவும் இசையாது
நீயின்றி நானில்லை
நாடிநரம்புகளுமில்லை!
உழைத்தேன் களைத்தேன்
மலைத்தேன் இளைத்தேன்
எதற்கும் நீ சோர்ந்ததில்லை!
என்றும் ஓய்ந்ததில்லை!
பாடம் படித்துக் கொண்டே....
படமும் பார்த்தேன்!
எழுதிக் கொண்டே ....
பாடலும் பாடினேன்!
இழையளவும் பிழை நேர்ந்ததில்லை!
பாடமும் மனதில் நிலைத்தது!
பாடலும் சுவைத்தது!
நினைந்தது நடந்தது...
மனசு அது நிறைந்தது...
வெகு சீக்கிரம் ஓடி வந்தாய்!
வெகுமானங்களைத் தேடித் தந்தாய்!
அடுத்து என்ன? கேட்பேன்
உடலனைத்தையும் ஒருங்கிணைத்தே..
கணப்பொழுதில் கட்டளையிட்டாய்...
ஓடி வந்தே உதவிட்டாய்!
இன்றோ...
அடுத்து என்ன? கேட்கிறேன்
பதில் தர தடுமாறுகிறாய்!
தடமும் மாறுகிறாய்!
மனம் ஒன்று நினைக்க
உறுப்புகளோ...
ஒரு வேலைக்கு திணறுது
தவறுகள் தாறுமாறாக எகிறுது!
என் நிலைய நினைச்சு
மனசு பதறுது!
நினைவு சிதைந்தது
நினைப்பது மறக்குது!
தன்மானம் தொலையுது
அவமானம் நாடி வருகுது!!
எத்தனை பாயிரங்கள் உன்னுள் !
எத்தனை ஆயிரம் செய்திகள் உன்னுள்!
தட்டியதும் கொட்டிடுவாய் கணினிப் போலே !
கணிப்பானின்றி நொடிப் பொழுதில்
விடை தந்திடுவாய்!
கணிப்பானைக் கையில் கொண்டு
என்ன செய்ய வேண்டும் ? சிந்திக்கிறேன்..
எங்கே உன் பரபரப்பு?
எங்கே உன் துடிதுடிப்பு?
என்னுள் உருவான
அவசர வாழ்க்கை உனை அலைகழித்திருக்கலாம்!
போராட்டங்கள் உனை
மலைக்க வைத்திருக்கலாம்
சினம் உனை அழித்திருக்கலாம்
கவலைகள் தினம் தினம் பிழிந்திருக்கலாம்
பயிற்சியின்றி நீயும் மழுங்கியிருக்கலாம்...
நின்று விடாதே!
மறதியால் எனைக் கொன்று விடாதே!
உன் பலமதில் நான் வலம் வருகிறேன்!
ஒருநாளும் இதை மறவாதே!!!
ஊக்கமதைத் தந்திடு!!
ஆக்கமதைச் சேர்த்திடு!!!