வாழ்ந்தவள்!
வாழ்ந்தவள்!
சிவனேஸ்வரன் எம்.ஏ.,
தனக்கு இல்லாமல் தம் குழந்தைகளுக்காக உழைக்கின்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இது சமர்ப்பணம்.
திட்டுகிறாய்
நான் வெறுப்பதில்லை,
கோபம் கொள்கிறாய்
நான் எதிர்ப்பதில்லை,
ஏவல் செய்கிறாய்
நான் மறுப்பதில்லை,
அணைக்கிறாய்
நான் தடுப்பதில்லை,
அன்பு ஒன்று மட்டுமே
உனக்கு வைக்கத் தெரிகிறது,
ஆதரவு ஒன்று மட்டுமே
உனக்கு கொடுக்க தெரிகிறது,
ஈகை ஒன்று மட்டுமே
உனக்கு செய்ய தெரிகிறது,
இன்பம் ஒன்று மட்டுமே
எனக்கு வாழ்க்கையாகிறது!!
உன்னால்!!
சொட்ட சொட்ட நல்ல சொல்லை
சொன்னவள் நீ தான்,
கால் நோக நடந்து நடந்து
நடக்க வைத்தவள் நீதான்,
உன் சத்துக்கள் குறைய குறைய
பால் கொடுத்தவள் நீதான்,
உன்னையே ஊட்டி ஊட்டி
உடல் கொடுத்தவள் நீதான்!!
நீ இன்னல்
அடைந்த வேளையிலும்,
என்னை நல்முகத்தோடு
பெற்றவள்,
நீ துன்பம்
அடைந்த வேளையிலும்
என்னை இன்பத்தோடு
வளர்த்தவள்,
வாழ்ந்தாய் வாழ்ந்தாய்
எனக்காகவே வாழ்ந்தாய்,
"பார்"
அதிலும் கூட
வாழ்ந்த" தாய் "
அம்மா நீங்க வாழவில்லை
எனக்காக இல்லை
உங்களுக்காக!!