எது சுதந்திரம்?
எது சுதந்திரம்?
நுரை நிரப்பி பெருக்கெடுத்து ஓடிய ஆறுகள்
சாக்கடை நீரின் சாயம் வாங்கி
இல்லாத பிணிகளை கொடுக்கிறதே
இதுதான் சுதந்திரமா?
கோடி மரங்களை வெட்டிச் சாய்த்து
ஆறு வழிச்சாலைகள் அமைத்து
எந்தவித கவலையுமின்றி
ஆனந்தமாய் மகிழுந்தில் செல்கிறோமே
இதுதான் சுதந்திரமா?
மேற்குத் தொடர்ச்சி மலைகளை குடைந்து
இத்தனை கட்டடங்கள் கட்ட வேண்டுமா?
வயல்வெளிகளை அழித்துத்தான்
உன் வம்சம் பிழைக்க வேண்டுமா?
ஒரு பிடி சோற்றில்
இத்துனை கலப்படம் எப்படி வந்தது?
வளங்கள் இருக்குமென்றால்
மக்கள் ஏன் வறுமையில் வாடுகிறது?
கப்பலேறிப் போன வெள்ளைக்காரனுடன்
கைகுலுக்கிக் கொள்வது ஏன்?
அந்நியர்கள் எல்லைக்குள் நுழையும் வரை
சுதந்திரம் கொடுத்தது யார்?
பார(தீ)யைப் போன்று யாரும்
ஏன் கவிபாடவில்லை!!
குமரனைப் போன்று யாரும்
ஏன் கொடிகாக்கவில்லை?
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாட்டில்
சாதிப் பயிரை சமூகம் ஏன்
நீரூற்றி வளர்கிறது?
சுகமளிக்கும் கல்வியை
குழந்தைகள் ஏன்
சுமையாக கருதுகிறது?
நமக்கென்று வாங்கிய நாட்டில்
நாம் இன்னும் அடிமைகளா?
உதிரம் என்னும் நதியில்
வீரர்கள் இன்றும் குளிக்கிறார்களா?
"சுதந்திரம் சுதந்திரம்"என்று
1947 ல் எல்லோரும் கொண்டாடியது பொய்யா?
இந்தியா விடுதலை வாங்கியது
என்பதெல்லாம் வெறும் வரலாறா?
சுதந்திரம் என்னும் போது
வருகின்ற சுகமின்றி!
அச்சம் என்னும் வார்த்தை தான் நெஞ்சுக்குள் ஊறுகிறது!!
விடை தெரிந்த கேள்விகள் தான்
விடுதலையாகி இருக்கின்றன!!
இன்னும் புரியாத சில கேள்விகள் தான்
சுதந்திரப் பெயரில் வாழ்கின்றன!!
எது சுதந்திரம்- இங்கு
எதற்கெல்லாம் சுதந்திரம்?