புத்தாண்டு...!
புத்தாண்டு...!
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
மீண்டுமொரு புத்தாண்டு
மானுடத்தை வாழவைக்க
வேண்டுமொருவரம்வேண்டும்
வேதனைகள் தொலைந்திடவே
ஆண்டவனே செவிசாய்ப்பாய்
அகிலத்தை
வாழவைப்பாய்!
தீண்டுகின்ற செயல்களெலாம்
தரவேண்டும் நல்லின்பம்
கொரோனாவின் கொடுமையினால்
கதிகலங்கும் மானுடத்தை
திறனுடனே எதிர்கொள்ளும்
தைரியத்தை நீயருள்வாய்!
சிரமங்கள் தொலைத்திடுவாய்
செந்தமிழின் புத்தாண்டில்!
வரங்கள்பல கொடுத்துதவி
வாழவைப்பாய் வையகத்தை!
விண்முளைக்கும் வெண்ணிலவும்
வீசுகின்ற நறுங்காற்றும்
மண்முளைக்கும் மரங்கொடியும்
மானுடத்தைக் காத்திடவே
கண்விழித்த புத்தாண்டே
கரம்பிடித்து வழிகாட்டு!
எண்ணமதில் என்றென்றும்
உண்மைதனை நிலைநாட்டு!
மதமினமெனும் பிரிவினைகள்
மனதினிலே அரிக்காமல்
இதமான அன்பாலே
இதயத்தை அலங்கரிப்பாய்!
பயங்கோபம்
தொலைத்திடுவாய்
பண்புகளை வளர்த்திடுவாய்!
அயராத உழைப்பினையெம்
அகத்தினிலே விதைத்திடுவாய்!
நன்றிகள் சொல்லும் நாவை
நன்மகள் சித்திரை தருவாள்!
இன்றினும் மேவி வாழ
இனியநல் வழிகள் பிறக்கும்!
நன்றியில் நட்பைப் பார்க்கும்
ஞானமொன் றினிமேல் பிறக்கும்!
என்றுமே இனிமை குன்றா
இதயத்தை அருள்வாய் நன்றே!