நானாக நான்...!
நானாக நான்...!
இந்த
பூமித்தோட்டத்தில்
முளைத்த
பொழுதிருந்து
நான் நானாக
வாழ முடியவில்லை!
நாணலாகத்தான்
வாழ முடிகிறது!
தனியே
இயங்கும் வரை
தாயன்பின்
தாக்கம்!
உலகம் புரிய
தந்தையறிவின்
தாக்கம்!
எதிர்கால
வாழ்விற்கு
எழுத்தறிவித்தவரின்
இமாலயத் தாக்கம்!
குடும்பத்தில்
நுழைந்தவுடன்
குத்துவிளக்கேற்ற வந்த
கவிதையின்
தாக்கம்!
தந்தையென்னும்
பதவியைப்
பரிசாகத் தரும்
குழந்தைகளின்
தாக்கம்!
நட்பின் தாக்கம்!
நாட்டு நடப்பின் தாக்கம்!
சமூகத்தின் தாக்கம்!
உலகத்தின் தாக்கம்!
நான் நானாக
வாழ்தலின்
அர்த்தம் என்ன?
பிறர் நலன்
கருதாது
தான் தன் சுகமே
பிரதானம்
என்றிருத்தலா?
சமூகக்
கோட்பாடுகளை
மதியாது
விரும்பிய
படியெல்லாம்
வாழ்வை
வடிவமைப்பதா?
ஒழுங்காக
வாழ நினைத்தால்
சமூக விதிகளின்
எல்லைக்குள் தான்
வாழ முடியும்!
பிறத்தலும்
இறத்தலும்
நம் கையில்
இல்லாத நிலையில்
இடைப்பட்ட காலம் என்
இஷ்டப்படிதான்
வாழ்வேனென்பது
எவ்வாறியலும்?
ஒருவேளை
நான் நானாக வாழ்வேன்
என்றெண்ணுவது கூட
யாராவது ஒருவரின்
தாக்கமாகக் கூட
இருக்கலாம்!
நான் நானாக
வாழ்தல் இயலாது!
நாணலாகத்தான்
வாழமுடியும்!
தன்னம்பிக்கை
இல்லாதவனின்
தனிப்பட்ட கருத்து
இதுவென்று
ஒதுக்கித்தள்ள முடியாது!
உளவியலின் படி
நான் நானாக
வாழ்தல்
இயலாதென்றே
தோன்றுகிறது!