என் சாதனை!
என் சாதனை!
மகனே,
வறுமைக்கு வாக்கப்பட்டு
சிறுமைகள் அடைந்த சிறுக்கி நான்!
நீ பெருமையோடு பீடு நடை போட....
வறுமையோடு போராடிய வஞ்சி மகள் நான்!
உலகம் மறந்தேன்
உறவுகளை இழந்தேன்
உறக்கம் துறந்தேன்!
உன்னை மட்டும் நினைத்தேன்!
வாய்க் கஞ்சி உனக்கு கிடைக்க....
வயிற்றில் ஈரத் துணியைக் கட்டி....
பசித் தீயில் கருகிய பாவி நான்!
பட்டங்கள் நீ சுமக்க..
பழக்கூடையை தலையில்
சுமந்த பாவி நான் !
நீ வளம் பெற...
நான் நலங்கள் இழந்தேன்!
படித்தாய்... பட்டம் பெற்றாய்!
வாழ்வில் உச்சம் அடைந்தாய்!
தாயை துச்சமாய் நினைந்தாய்!
விழி இழந்தேன்!
மொழி மறந்தேன்!
முதுமை எனை நெருங்க..
பதுமையாய் ஓரமானேன்!
உனக்கு நான் பாரமானேன்!
நா வறண்டு கிடக்கிறேன்...
ஒரு வாய் தண்ணீருக்காக!
ஈக்கள் வந்து எனை மொய்த்து
ஆறுதல் தந்தன!
பசி வயிற்றை இறுக்குகிறது...
ஒரு கவளம் உணவிற்காக!
நான் வளர்த்த நாய்
குரல் எழுப்பி தேறுதலை தந்தது!
நிழலாய் நீ இருப்பாய் என
கனவு கண்டேன்...
கனவு கானல் நீராய் ஆனது!
நான் வளர்த்த வேப்ப மரமே நிழல் தந்து....
தன் கிளைகளை அசைத்தது....
புழுங்கிய எனக்கு ஆறுதலாக!
புழுக்கம் உடலில் இல்லை!
என் மனதில் தான் !
பாவம் அதற்கு எப்படி தெரியும்?
ஏணியாய் ஏற்றி விட்ட எனை
ராணியாய் தாங்குவாய் என நினைந்தேன்!
கோணியாய் வெயிலிலும் மழையிலும் நனைந்தேன்!
உயிர் பிரியும் தருவாயில்
என் உயிராய் நினைத்த உனை
ஒருமுறை தரிசிக்க விழைந்தேன்!
வியாதி ஒட்டிக்குமுன்னு
வீதியோடு சென்றதை கேட்டு
கண்ணீரில் கரைந்தேன்!
மரணமே, வா நீயாவது எனை
ஆரத் தழுவிடு!
வாயாற அழைத்தேன்!
மகனே,
என் வாழ்வில் அன்பிற்கும் பஞ்சம்!
உனக்கு ஏன் இத்தனை வஞ்சம்?
நிற்கதியானேன்... !
பாவம்... நீ உணர மாட்டாய் என் வேதனை!
வேதனை தெரியாமலே
வளர்த்து விட்டேன்.....
இதுவே என் சாதனை!