சற்றே ஓய்வு எடு
சற்றே ஓய்வு எடு
ஆலமரம் ஒன்று வீழ்ந்து கிடக்கிறதோ ?
பட்சிகள் தங்கும் இடம் தெரியாமல் தவித்து நிற்கின்றனவோ?
தலைவியின் கைகள் கட்டுண்டு கிடக்கின்றனவே...
எப்போது ஆணையிடுவாய் என உம் தொண்டர்கள் காத்துக் கிடக்கின்றனரோ?
தாயை இழந்து உம் பிள்ளைகள் தவித்து நிற்கின்றனவே என
ஆதரவு கூற உன் இதழ்கள் விரிந்தனவோ?
வார்த்தை வரவில்லை ஆதலால் உன் இதழ்கள் நீரைச் சொரிகின்றனவோ?
நீ வருகின்றாய் என்று தெரிந்தவுடன்
மேள தாளங்களும் மேடை அலங்காரங்களும்
விளம்பரப் பதாகைகளும் விதிமுறைக் கடைபிடிப்பும்..
தாரத்தப்பட்டைகளும் ஆட்டம் பாட்டங்களும்..
கூத்துக் கும்மாளங்களும் கூட்ட நெரிசல்களும்...
அலங்காரத் தோரணங்களும் அமைச்சர்களின் அணிவகுப்பும்....
காவல்துறையின் பரபரப்பும்... தொண்டர்களின் ஆர்ப்பரிப்பும்...
மகளிரின் ஆரவாரமும் அணையா ஆரத்தித் தட்டுகளும்
எல்லாவற்றையும் பார்த்து உம் இதழ் சிந்தும் புன்னகையும் போனதெங்கே?
விரல்கள் காட்டும் வெற்றிச்சின்னம் எங்கே?
அழகுச் சிலையென அன்னநடையிட்டு...
பாதம் நோகாமல் நடந்து செல்லும் ஒய்யார நடை எங்கே?
அடுத்து என்ன திட்டம் வகுக்கிறாய்?
ஏன் இந்த மௌனம்?
கண்கள் பனிக்கின்றன...
கரங்கள் வணங்குகின்றன....
மனங்கள் கணக்கின்றன....
இதயங்கள் தவிக்கின்றன!
மலர்ச்செண்டுகள் குவிகின்றன...
உற்சாகத்தில் மிதந்த கூட்டம் வாட்டமுடன் அலைகின்றன!
கைத்தட்டி எழுப்பிய ஒலி விண்ணைப் பிளந்தது...
இன்றோ....
கரங்கள் தட்டுகின்றன....
தலையிலும் ....மார்பிலும்....
வாயிலும்.... வயிற்றிலும்....
அம்மா! என்ற ஓல ஒலி விண்ணை மட்டுமல்ல....
மண்ணையும் பிளந்தது! ஆனால் மனதைப் பிழிந்தது !
உன் முகம் பார்த்து தரிசித்தவர்கள்....
நிலம் பார்த்து வணங்குவர்!
இன்றோ....
உயர்ந்த கரங்களும்... உம்மை நோக்கிய விழிகளும் ...
மற்றவற்றை காண மறுக்கிறது!
தென்றல் கூட உன் அனுமதியின்றி
உன் தேகத்தை வருடியிருக்காது!
அன்றலர்ந்த மலராய் ஒப்பனையின்றி....
சிற்பமாய் வந்து நிற்பாய்!
இன்றோ....
நீ மட்டும் மௌனமாய்!
அசையாத சிற்பமாய்....
ஆகாயத்தில் பறந்த போது கூட
அம்மனை தரிசிப்பது போல் வீழ்ந்து வணங்கும் பக்தர்கள் கூட்டம்....
கண்ணீரை காணிக்கையாக சுமந்து நிற்கின்றனர்!
உம் கரம் பட காத்திருந்த மலர்கள்....
உம் காலடியில் காத்துக் கிடக்கின்றன!
வழக்கத்தை விட அதிகமான கூட்டம்
வழக்கத்தை விட அதிகமான மலர்ச்செண்டுகள்!
தூங்கி எழு மறுக்கிறாய்!
தொட்டு வாங்க வெறுக்கிறாய்!
படித்ததை நினைவூட்டுகிறாயோ?
உரையாற்ற உவமைகள் கதைகளைத் திரட்டுகிறாயோ?
ஓ....! மாண்டு போனாயோ?
மீண்டு வருவாய் என்றல்லவா எண்ணியிருந்தோம்!
உன்னை நெருங்க காலனவன் என்ன சொல்லி ஏய்த்தான்!
விண்ணுலகை ஆள உன்னைப் போல்
ஓர் இரும்புப் பெண் வேண்டுமென்று....
இந்திரன் அழைத்ததாகவா?
உன் தலைமையில் சொர்க்கவாசல் திறப்பு விழா என்றா?
உழைத்தது போதும் ஓய்வு எடுக்க உன் தாய் அழைத்ததாகவா?
உழைத்தது போதும் உடலில் வலுவில்லை...
சற்றே ஓய்வெடுக்கலாம் என நீயே நினைத்தனையோ?
வறுமையை வென்று வாழ்வில் உயர்ந்தாய்!
அரசியலில் நுழைந்து ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாய்!
வாழ்வில் எத்தனையோ சோதனைகளைத் தாங்கி சாதனைகள் படைத்தாய் !
பாவம் சற்றே ஓய்வு எடு!
ஆறடி நிலத்துக்குள் ....
அழகான பேழைக்குள் ...
நீ விரும்பும் தனிமையில்....
கடற்காற்றின் இனிமையில்....
வங்கக் கடலோரத்திலே தங்க மகளே நீ தூங்கு!
ஓய்வு எடுத்து மீண்டும் வருவாய் எனக் காத்திருக்கிறோம்!
பெண்சிங்கமே பேழையைத் திறந்து வா!
தமிழ்நாட்டை ஆள அல்ல.....
இத்தரணியை ஆள!
உம்மைப் போன்றதொரு ஆளுமை வாய்ப்பதொரு அதிசயம்!