அமிர்தமாகும்
அமிர்தமாகும்
நான் மண்ணில் வீழ்ந்ததும்..
என் தாய் வாரியணைத்து ...
மார்போடு சேர்த்து...
தன் கொங்கையில்
என் இதழ் வைத்து
தன் முலைப் பாலை
பருகச் செய்தாள்!
அவள் அன்பில் என்னை
உருகச் செய்தாள்!
வளர்ந்தேன்... நடந்தேன்....
நிலாவைக் காட்டி சோறு ஊட்டினாள்!
என் உணவாய் உன்னைக் காட்டினாள்!
உன் சுவையை உணர்ந்தேன்!
உனையே நினைந்தேன்!
உறவாய் இணைந்தேன்!
உன் ருசியில் பிணைந்தேன்!
என் தாயின் முலைப்பாலை மறந்தேன்!
உணவே....
என் தாயாய் உனை நினைத்தேன்!
நீயே என் உடல் வளர்த்தாய்!
உயிர் வளர்த்தாய்!
அறிவு தந்தாய்
ஆற்றல் தந்தாய்
காத்து நின்றாய்!
இன்றோ....
நீயே என் உயிர் எடுக்கும் விஷமானாய்!
மக்கள் தொகைப் பெருக்கத்தின் சாபமா?
விஞ்ஞான வளர்ச்சியின் கோலமா?
பேராசைப் பேயின் பாவமா?
கலப்படம்... எல்லாம் கலப்படம்!
நேற்று...
எண்பதுகளில் தொண்ணூறுகளில்
முடிந்தது...
இன்று
நாற்பதுகளில் ஐம்பதுகளில்.... !
நாளை?
எத்தனை படம் காட்டினாலும்
எத்தனை நாள் ஓட்டினாலும்
மனதில் பாடம் ஆகிடாது!
விசிலடித்து கொண்டாடிடும் கூட்டம்
விசயந்தனை உணர்ந்திடாது.. !
எல்லாம் வேஷம்.... வெளிவேஷம்!
எத்தனை கோஷங்களும் ஒன்றும்
செய்து விடாது !
மனித மனங்களில் ஏறியுள்ள
விஷங்களை நீக்கினால் ....
எல்லாம் ஷேமமாகும்!
உணவு என்றும் அமிர்தமாகும்!