மொழி கேளு
மொழி கேளு
விண்ணை முட்ட வளர்ந்துவிட்ட
செங்கல் மரங்கள்
செல்போன் டவர்கள்
தரைமட்டமான தாவரங்கள்
தரையை மூடி நிற்கும் பளிங்கு கற்கள் வயலை ஆக்கிரமித்த ஆலைகள் வழுவழுப்பான தார்ச்சாலைகள்
அண்ட இடமின்றி அலைகிறோம் !
ஒண்ட நிழல் இன்றி தவிக்கிறோம் விதைகளை பரப்பி ...
விரிந்த வனங்களை உருவாக்கி..
வாழ வழியின்றி வாடி நிற்கின்றோம்! வழக்குத் தொடர வக்கில்லை!
வாதாட வக்கீல் இல்லை!
நீதி கூற நாதி இல்லை!
நிற்கதியாக நிற்கின்றோம்!
சொத்தில் பங்கு கேட்க வில்லை! சொந்தத்தில் வீடு கேட்கவில்லை! வாடகைக்கு விட வாதிடவில்லை போக்கியத்திற்கு விட போராடவில்லை! குத்தகைக்கு விட குமுறி அழவில்லை! ஒத்தை வீடு கேட்கின்றேன்!
ஒரு ஜீவனை வளர்க்க பார்க்கின்றேன்!
காம்பவுன்ட் வரை கண்ணாடி இட்டு...
காற்று கூட நுழைய விடாமல்...
காத்துக் கொண்டால்...
வாயில்லா ஜீவன் எதிர்த்து பேச வழியில்லை !
எடுத்துக்கூற மொழியில்லை!
உத்திரம் இருந்திருந்தால்...
பத்திரமாய் வீடு கட்டுவோம்!
முற்றம் இருந்திருந்தால் ...
சுற்றமொடு வாழ்ந்திருப்போம் !
கூரை இருந்திருந்தால்....
யாரையும் கேட்டிருக்க மாட்டோம்!
பத்து வீடு கேட்கவில்லை
சொத்துபத்து சேர்க்கவில்லை
எதையும் சுரண்டி நாங்கள் பிழைக்கவில்லை
எதையும் அழித்து வாழ கேட்க வில்லை இயற்கையோடு இயற்கையாய்
இயைந்து காத்து வாழுகின்றோம்!
பறந்து திரிந்து அலைகின்றோம்!
பசி தீயை போக்குகின்றோம்!
படைத்தவனே வழி கூறு !
பாவி எம் மொழி கேளு!
நீதி தனை வழங்கிடு!
நிம்மதியாய் வாழ விடு !