கால்பந்து
கால்பந்து
விளையாட்டு என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான விளையாட்டுகள் பிடிக்கும். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கால் பந்து. அதனை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கியுள்ளேன்.
ப்ரத்யுஷா ஜானகி மற்றும் ராமநாதன் தம்பதியினரின் செல்ல மகள். சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதுவும் பொம்மைகளோடு விளையாடிய நாட்களை விட பந்துகளோடு நேரம் செலவிட்டதே அதிகம். அவளை மிகவும் கவர்ந்தது கால்பந்து. பள்ளியிலும் விளையாட்டு நேரங்களில் கால்பந்து விளையாடுவதில் கழிப்பாள்.
விளையாட்டில் கொண்டிருந்த ஆர்வமும் கவனமும் படிப்பில் இருந்ததில்லை. ஆனால் மேலோட்டமாக பாஸ் செய்வதற்காக படித்து கொள்வாள். அம்மா அப்பா என இருவரும் அவளுக்கு தடையாக இருந்தது கிடையாது. அவள் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது உறவினரின் திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த ஜானகி ராமநாதன் தம்பதியினர் விபத்து ஒன்றில் சிக்கி அகால மரணம் அடைந்தனர். செய்தி அறிந்த ப்ரத்யுஷா அழுது கதறினாள்.
அம்மா அப்பாவை தவிர உறவுகள் யாருடனும் அவளுக்கு பழக்கம் இருந்ததில்லை. இப்படி ஒரு சூழலில் தன் பெற்றோர் அவளை விட்டுச்செல்வார்கள் என்று சிறிதும் நினைக்கவில்லை. அவர்களுக்கான இறுதி சடங்குகளை உறவினர்கள் செய்து முடித்தனர். அத்தோடு முடித்துக்கொண்டனர். அடுத்து என்ன என்று யோசிக்கவில்லை ப்ரத்யுஷா. அவளால் அந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை.
அவளின் அத்தை தேவகி தான் அவளை அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்தாள். தேவகி ராஜ்குமார் தம்பதிகளுக்கு இரு செல்வங்கள் மூத்தவன் அர்ஜுன் பொறியியல் மூன்றாமாண்டு மாணவன் இளையவள் ரேணுகா பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ளாள். ஒற்றை மகளாய் வளர்ந்ததால் அவளால் யாருடனும் ஒட்ட இயலவில்லை.
நாட்களான பின்னும் பள்ளிக்கு அவள் செல்லவில்லை. போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். வீட்டில் அனைவரும் சொல்லி பார்த்தனர். ஒரேடியாக மறுத்துவிட்டாள். அர்ஜுன் அவளிடம் பள்ளிக்கு செல்ல வேண்டாம் தேர்வு மட்டும் எழுது போதும் என்று மிரட்டாத குறையாக சொல்லி சென்றான். அதட்டல், மிரட்டல் ஏதும் தெரியாமல் வளர்ந்தவள் அர்ஜுனின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் தலையை ஆட்டினாள்.
ரேணு, தேவகி, ராஜ்குமார், அர்ஜுன் என யாராவது ஒருத்தர் அவளுடன் எப்போதும் இருந்தனர். அர்ஜுன் சொன்னது போல் தேர்வு மட்டும் எழுதினாள். ஒரு நாள் அர்ஜுன் அவளை கால்பந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு கூட்டி சென்றான். அங்கே அவளிடம் ஸ்கூலுக்கு போனா பீஸ் கட்டணும்ன்னு தானே போக மாட்டேன்னு சொன்னன்னு கேட்டான். அவளிடம் அதற்கு பதில் இல்லை. வாய தொறந்து பேசு ப்ரத்யு என்ற அவனின் அதட்டல் மொழி வேலை பார்த்தது. உடனே தலையை ஆமா என்று ஆட்டினாள்.
அவன் மேலும் அவளிடம் இதுவரை போனது போனதாகவே இருக்கட்டும். நாளையில் இருந்து நீ பிராக்டீஸ்கு போகணும் சரியா. அவள் உடனே அதுக்கும் பீஸ் கட்டணும் நா போமாட்டேன்னு சொன்னவுடனே அவனுக்கு கோபம் தலைக்கேறியது. அவளிடம் அதை முழுவதுமாக காட்டாமல் இப்போ போ நீ வளந்து சாதிச்சப்றம் எனக்கு மொத்தமா திருப்பி கொடுன்னு சொன்னான். அவனை நம்பமாட்டாமல் ஒரு பார்வை பார்த்தாள். அதற்கு அர்ஜுனின் பார்வை சொன்ன செய்தியில் ஒத்துக்கொண்டாள்.
பயிற்சியை தொடர்ந்தாள். தினமும் அர்ஜுன் அவளை அழைத்து சென்று வருவான். அவள் துவளும் போதெல்லாம் அவளை ஊக்கிவித்துகொண்டே இருப்பான். சிறு சிறு வெற்றிகளை ருசிக்க தொடங்கினாள். நாட்கள் செல்ல செல்ல அவள் விளையாட்டில் மிகவும் பிஸி. அர்ஜுன் வேலைக்கு சேர்ந்தபின்னும் அவன் அவனாலான உதவிகளை செய்து வந்தான். இப்பொழுது ப்ரத்யுஷா இந்திய பெண்கள் கால்பந்து அணியின் தலைவி. அடுத்த வாரம் நடைபெற உள்ள உலக கால்பந்து போட்டியை வழிநடத்த போகிறவள்.
அவளுக்கு மேலும் ஊக்கம் அளித்து வந்தான் அர்ஜுன். அவளின் அத்தனை வருட பயிற்சிக்கு பலனாக அவள் அவளின் போட்டியில் சிறந்து விளங்கினாள். தன் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்தாள்.
குழந்தை பருவத்தில் மட்டுமே விளையாட வேண்டும் என்பதை நாம் எழுதப்படாத சட்டமாக எண்ணுகிறோம் ஆனால் அது தவறு. ஒரு சிலருக்கு விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்காக தோணலாம். சிலருக்கு விளையாட்டு அவர்களின் கனவு லட்சியம் குறிக்கோள் என எல்லாமே அதுவாக இருக்கும். விளையாட்டில் ஈடுபாடுடன் இருப்பவர்களுக்கு தடை சொல்லாமல் அவர்கள் தங்களை நிரூபிப்பதற்கு சாதிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். கல்வி என்பது ஏட்டறிவில் அல்ல வாழ்க்கையை கற்று கொள்ளும் முறையில் உள்ளது.