ஆகாயம்
ஆகாயம்
ஆகாயம்.
மேலே ஆகாயத்தை பார்த்த படி கயிற்று கட்டிலில் படுத்து இருந்தான் குணா.பக்கத்தில் அவனுடைய தந்தை வயலில் வேலை செய்த களைப்பில் உறங்கி கொண்டு இருந்தார்.
குணாவிற்கு ஐந்து வயது.இனி மேல் தான் பள்ளியில் சேர வேண்டும்.
அடுத்த வருடம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அம்மா செல்லாயி சொல்லி கொண்டு இருந்தாள்.
அப்பா கருப்பன் ஆகட்டும் என்று தலையை ஆட்டி விட்டு கட்டிலில் படுத்து விட்டான்.
அவனுடைய கவலை பருவத்தில் பெய்ய வேண்டிய மழை தள்ளி போய் கொண்டு இருந்தது.கிணற்றில் இறைத்து நிலத்திற்கு பாய்ச்சும் அளவிற்கு தண்ணீர் இல்லை.ஒரு போர் போட்டால் தண்ணி கிடைக்கலாம்.
ஆனால் போர் போடும் அளவிற்கு கருப்பணிடம் பணம் இல்லை.
கடவுளே சீக்கிரம் ஒரு மழையை கொடு,மாடுகள் தண்ணீர் இல்லாமல் கஷ்ட படுகிறது., என்று கடவுளை வேண்டி கொண்டு இருந்தான்.
முந்தைய நாள் குணாவை அழைத்து கொண்டு பக்கத்து தோட்டம் சென்றான். குணா அப்பாவின் tvs வண்டியில் முன்னாடி நின்று கொண்டு பயணிப்பது பிடிக்கும்.
எங்கே அப்பா போகிறோம் என்று குணா கேட்க,வா உனக்கு ஒன்று காண்பிக்கிறேன் என்று சொல்லி அழைத்து சென்று கொண்டு இருந்தான்.பக்கத்து தோட்டம் நெருங்க நெருங்க காதை பிளக்கும் சத்தம்.அங்கு ஒரு லாரி வந்து நின்று நிலத்தடியில் ஓட்டை போட்டு நிலத்தை குடைந்து கொண்டு இருந்தது.கூடவே தண்ணீர் குழாய் மூலம் பீச்சி அடித்து கொண்டு இருந்தது.
என்னப்பா இது என்று கேட்க,கருப்பன் இது தான் போர் போடும் வண்டி,குழாயை வைத்து நிலத்தை குடைந்தால் தண்ணீர் கிடைக்கும் என்று குணா புரியும் படி சொல்லி கொண்டு வந்தான்.
அந்த லாரிக்காரரை போர் போட எவ்வளவு ஆகும் என்று கருப்பன் கேட்க,லாரிக்காரர் அது ஆகும் சுமார் 60,70 ஆயிரம் என்றார்.
கருப்பன் தலைகீழாக நின்றாலும் அந்த பணத்தை புரட்ட முடியாது.
அந்த வருத்தத்தில் கருப்பன் கண்ணை மூடி படுத்து இருந்தான்.குணா மேலே பார்க்க ஆகாயம் நீல நிறத்தில் தெரிந்தது.பொழுது சாய்ந்து கொண்டு இருந்தது.
அவனுக்கு ஒரே குழப்பம், மழை வந்தால்,இந்த நீல நிறம் கருப்பாகி மேலே இருந்து தண்ணீராக கொட்டுது.அப்போ தண்ணீர் தேவை பட்டால் ஆகாயத்தை தானே குடைய வேண்டும்.பக்கத்து தோட்டத்தில் ஏன் மண்ணை குடைந்து கொண்டு இருக்கிறார்கள்.ஆகாயம் இங்கு இருந்து எவ்வளவு தூரம் இருக்கும்.இந்த நீல நிறம் எப்போது கருப்பாகும்.கருப்பு ஆனால் தண்ணி கிடைக்குமா,
கேட்டால் மண்ணில் துளை போட தான் லாரி இருக்கு என்று சொல்கிறார்கள்.
ஆனால் தண்ணீர் என்னவோ ஆகாயத்தில் இருந்து தான் மழையா கொட்டுது.
அப்பா அப்பா என்று குணா கூப்பிட,அவனும் அரை தூக்கத்தில் இருந்த படி சொல்லு தங்கம் என்று கூற,குணா,அப்பா நான் பெரியவன் ஆகி,ஆகாயத்தை துளை போடும் ஒரு லாரியை கண்டு பிடிக்கிறேன்.
ஆகாயத்தை துளை போட்டா தண்ணீர் பீச்சி அடிக்கும் இல்லையா அப்பா என்று சொல்ல,கருப்பன் அவனை கட்டி பிடித்து,நீ செய்தாலும் செய்வே,அப்படியாவது தண்ணி கிடைக்கட்டும்,இப்போது படுத்து தூங்கு என்று அவனை தூங்க வைத்தான் கருப்பன்.
