கொரோனா தீபாவளி
கொரோனா தீபாவளி
இருள் சூழ்ந்த இடமாய் நம் பூமி
மக்கள் தாகம் தீராமல் இன்னமும்
இன்னல்களைப் பரப்பும் அரக்கனாய் இக்கிருமி..
அருகிவரும் உயிரினம் ஆனதோ இக்குலம்..
சொல்லு யாம் படைத்த சாமி ?
அதர்மம் கொன்று வெளிச்சம் தந்து
மனிதம் வாழ ஒளி பிறந்த , தீபத்திருநாளின்று..
அக்கணம் தந்த மகிழ்வு மீண்டும் இப்புவி பெறுமா?
உயிர் குடிக்கும் அரக்கன் உருவாக்கியதும் இறை படைத்த இதே கரங்கள் தானென்பதை நாம் அறிவோமா?
இயற்கையை மீறிய இயல்புகளை புகுத்தினால் அன்னை பூமி தான் தாங்குமா ?
முன்னோர் அளிக்கவில்லையாம்,
பின்னோருக்கு கடன் பட்டு நாம் பெற்றதாம் இப்பெரு உலகு..
நாம் விதைத்ததே மரமாகும்..நாம் செய்ததையே இயற்கை திருப்பும்..
இனிமேலும் இன்னா வேண்டா யமக்கு..
அன்பெனும் அகல் விளக்கில்,
மனிதத்தின் நெய் ஊற்றி,
கடமை உணர்ந்து
பொறுப்புத் திரியாதொரு திரி போட்டு
இயற்கை அழிக்கா பண்பெனும் தீபம் ஏற்றுவோம்..
இன்னுமோர் அரக்கன் இக்குலம் காணாது வழி செய்வோம், இந்நன்னாள் எனும் பொன்னாளில்..
புன்னகைப் பூவாய் பொறியும் மாத்தாப்பு போல்.. பொன்சிறகாய் விரியும் மயில் தோகை போல் , பாரெங்கும் பூத்துக் குலுங்கி அன்பால் விரியட்டும் மனித மனங்களும்..!!