திருந்திய மனம்
திருந்திய மனம்
ஒரு முனிவர் தான்தான் அறிவாளி என்றும் தன்னைவிடச் சிறந்தவர் இந்த உலகத்திலேயே இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்.
ஒருநாள் அவர் வீதி வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியில் சிறுவர்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன் மட்டும் விளையாடாமல் ஒரு மூதாட்டிக்கு விறகு எடுத்துக் கொடுத்து, அவர் வேலையில் உதவி செய்து கொண்டு இருந்தான்.
இதைப் பார்த்த ஆம் முனிவர், அச்சிறுவனிடம் நீ ஏன் விளையாடாமல் இருக்கிறாய்? நீ சிறுவன் தானே உனக்கும் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்காதா? என்றார்.
அதைக் கேட்ட அச்சிறுவன், ஐயா முனிவரே, நான் எப்போது வேண்டுமானாலும் விளையாடிக் கொள்ளலாம். ஆனால், வயதான இம் மூதாட்டிக்கு ஒருநாள் உதவும் பாக்கியம் கிடைத்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
இதைக் கேட்ட முனிவர், வெட்கித் தலை குனிந்தார். முனிவரான நான்தான் இவ்வூர் மக்களுக்கு உதவுவேன். நான் இல்லையென்றால் இவ்வூரில் யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள் என்று எண்ணியிருந்தேன்.
இச்சிறுவனுக்கு இருக்கும் பக்குவம் தனக்கில்லையே என்று நினைத்து மனம் திருந்தினார். சிறுவனை வாழ்த்தி விட்டு தெளிந்த மனதுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார்.