தனி ஒருவன்
தனி ஒருவன்
வில்லன் என்றாலே மிகவும் கொடூரமானவன் அராஜகம் செய்பவன் சண்டை சச்சரவு செய்பவன் என்று தான் அனைவர்க்கும் ஞாபகம் வரும். இன்று அதை மாற்றினால் என்ன?
தனி ஒருவன் திரைப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரம் என் மனதை கவர்ந்த ஒன்று. அதை எனது கற்பனையில் எனக்கு பிடித்த வகையில் இங்கே படைத்துள்ளேன்.
சித்தார்த் அபிமன்யு தந்தை இல்லாமல் தாயால் வளர்க்கப்பட்டவன். சிறு வயதிலேயே மிகவும் பக்குவப்பட்டவன். புத்திசாலியும் கூட. அவனை நன்றாக படிக்க வைக்க அவன் அம்மா அனுபவிக்காத கஷ்டங்கள் இல்லை. அம்மாவின் கஷ்டத்தை பார்க்கும்பொழுதெல்லாம் மனதில் சொல்லிக்கொள்வான் தன் தாயை ராணி போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. அறிவியலில் மிகுந்த ஆர்வமுடையவன்.
அவன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாள் அம்மா மயங்கிவிட்டாள். அவளை மருத்துவமனையில் அனுமதித்த பின் தான் தெரிய வந்தது அவளுக்கு புற்றுநோய் இருப்பதே. அதுவும் குணப்படுத்தும் காலம் கைமீறிப்போய்விட்டது என்று. தனக்காக இவ்வுலகத்தில் இருந்த தன் தாயை இழந்து நிர்கதியாய் நின்றான்.
அவனுடைய தேர்வையும் அவனால் எழுத முடியவில்லை. மேற்கொண்டு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் தன்னந்தனியாக நின்றிருந்தான். அக்கம் பக்கம் உள்ள கடைகளில் வேலைக்கு கேட்டிருந்தான். அதில் ஒருவர் அவனை தன் தொழிலுக்கு துணை வருமாறு அழைத்துக்கொண்டார். அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லை என்று தெரிந்தது இன்னும் வசதியாக போயிற்று அவருக்கு.
அவர் செய்து வந்ததோ போதைமருந்து கடத்தும் தொழில். அதனை சித்தார்த் தெரிந்துகொண்டபோதிலும் அங்கே வேலை செய்ய ஒப்புக்கொண்டான். சிறு வயது முதலே அறிவியலின் மீது இருந்த ஆர்வம் அவனை போதைமருந்தை பரிசோதிக்க தூண்டியது. தினமும் சிறிதளவு போதை மருந்தை எடுத்து ஆராய்ச்சியில் ஈடுபடுவான்.
வருடங்கள் ஓடியது. வேதியியலில் அடி நுனி கூட அறிந்து வைத்திருந்தான். அவனின் யோசனையை தான் அனைவரும் பின்பற்றினர் அங்கே. அவனின் சொல்படி பல போதை செடிகளும் அதனுடன் மூலிகை செடிகளும் வளர்க்கப்பட்டன. அதில் இருந்து மருந்துகள் தயாரிக்க ஆரம்பித்தான். வெளிநாட்டு மருத்துவ தொழிற்சாலைகளின் உதவியை கொண்டு செயல்படுத்தினான்.
தன் வாழ்விற்கு ஆதாரமாய் இருந்த அம்மாவை எது அவனிடம் இருந்து பிரித்து சென்றதோ அதற்கான மருந்தே அவன் கண்டுபிடித்திருந்தான். இதை முறைப்படி அறிவித்தால் ஏற்படும் சிக்கலினையும் அவன் அறிவான். இருப்பினும் மக்களை சென்றடைவதற்கான வழியை உருவாக்கினான்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆட்கள் வைக்கப்பட்டு அதில் புற்றுநோய் சிகிச்சைக்காக வருவோரை கண்காணித்து அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகளோடு இதனையும் கிடைக்க ஏற்பாடு செய்தான்.
செய்த செயல்கள் சட்டத்திற்கு புறம்பானதே என்றாலும் அவன் மனதில் துளியும் குற்ற உணர்வு இல்லை. எத்தனையோ குடும்பங்கள் என்னால் உயிர்பெற்று இருக்கிறார்கள் என்ற எண்ணமே அவனுள் எழுந்தது. அவனுடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தது. மேலும் சிகிச்சை என்ற பேரில் மக்களிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளை வச்சு செய்யவும் தயங்கியதில்லை.
இவை அனைத்தும் அவனின் தரப்பு வாதங்களாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
பிறவியிலேயே யாரும் தீயவர்கள் அல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளே அதற்கு காரணம் அனைவருக்குள்ளும் இருக்கும் ரஜோ குணம் சத்வ குணம் தமோதிரன் குணத்தின் வெளிப்பாடு தான் அது.