அக்பர் பீர்பால்
அக்பர் பீர்பால்
அக்பர் பீர்பால் கதைகளை நாம் சிறு வயதில் இருந்தே கேட்டு வருகிறோம். பீர்பாலின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியாது. தற்போதைய காலத்தில் அக்பரும் பீர்பாலும் என்ன விவாதிப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்போமா....
அக்பர் பீர்பாலுடன் சென்னை நகரத்தை சுற்றி பார்க்க வந்தார். கூட்ட நெரிசல் அவருக்கு பிடிக்கவில்லை. தன் பயணத்தை மகிழ்விக்குமாறு பீர்பாலிடம் சொன்னார். பீர்பால் கேள்விக்கணையை தொடுக்க ஆரம்பித்தார். முதல் கேள்வி எதற்கு சாப்பாடு போட்டால் உயிர் வாழும் தண்ணீர் கொடுத்தால் இறந்து போகும்? அக்பர் சிந்தித்து பார்த்துவிட்டு தெரியவில்லை என்றார். பீர்பால் நெருப்பு என்று பதிலுரைத்தார். அக்பர் புன்னகைத்தார். அடுத்த கேள்வி; பிடிக்கலாம் ஆனால் ஏறிய முடியாது அது என்ன? அக்பர் உடனே பதில் கூறினார் இது தெரியாமல் போகுமா சளி என்றார். பீர்பால் சரி என்று தலையசைத்தார்.
அடுத்த கேள்வி; 10 மனிதர்கள் சேர்ந்து ஒரு சுவற்றை ஏழு நாட்களில் கட்டி முடிக்கின்றனர் 6 மனிதர்கள் சுவற்றை முடிக்க எத்தனை காலம் ஆகும் என்று கேட்டார். அக்பரின் முகத்தில் யோசனை ரேகை பரவ ஆரம்பித்தது. அவ்வழியே சென்ற சுட்டி பையன் இதுகூட தெரியாதா ஏற்கனவே கட்டிய சுவற்றை ஏன் திரும்ப கட்ட வேண்டும் என்றான். அவனின் பதிலை கேட்ட அக்பர் திகைப்புற்றார். பீர்பால் அடுத்த கேள்வியை முன்வைத்தார். ஒருவர் மழையில் குடை இன்றி வீடு சென்று சேர்ந்தான் ஆனால் அவன் தலை முடி நனையவில்லை அது எப்படி என்றார். அக்பர் யோசிக்கும் முன்பே அந்த டீக்கடைக்காரர் அவர் தல சொட்ட தம்பி என்றார்.
பீர்பால் புன்னகையுடன் சரி என்று தலை அசைத்தார். அக்பர் பீர்பாலிடம் எப்படி எனக்கு தெரியாத கேள்விகளுக்கு எல்லாம் இவர்களுக்கு பதில் தெரிகிறது என்றார். அதற்கு பீர்பால் அறிவு என்பது ஏட்டில் இருந்து கற்பது மட்டுமல்ல வாழ்க்கை அனுபவத்தில் இருந்து கற்பதே ஆகும் என்றார் மேலும் நமக்கு தெரியாததை அடுத்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் தெரிந்ததை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். அக்பர் பீர்பாலின் தோளில் கைபோட்டு சபாஷ் என்றார்.