சிந்துபாத்
சிந்துபாத்
சிந்துபாத் என்னும் காமிக் கதாபாத்திரத்தை நாம் கடல் வாணிபம் செய்பவராக அறிவோம்.
மனம் எப்பொழுதும் புதுமையை நாடும். அந்த வகையில் நான் இன்று சிந்துபாதை வேறு ஒரு கதைக்களத்தில் சித்தரித்துள்ளேன்.
தொடாக்புர் என்னும் ஊரில் தான் நம் கதாநாயகன் வசிக்கிறார். மன்னராட்சி நடந்துகொண்டிருக்கும் ஊர் அது. அரசன் பார்வைக்கு வராமல் இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து கொண்டிருப்பவர் தான் நம் கதாநாயகன்.
அன்றோரு நாள் வயதான பெண்மணி ஒருவர் தன் பரம்பரையில் ஒவ்வொருவராக பத்திரப்படுத்தி வரும் வைரகற்களை காணவில்லை என்று சிந்துபாத்திடம் புகார் அளித்தார். அதை நாங்கள் எந்த நிலையிலும் வேறு யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்றும் அது எங்கள் மூதாதையர்கள் எங்களுக்காக விட்டு சென்ற ஆசீர்வாதம் என்றும் கூறினார்.
சிந்துபாதும் அவர் கூறியவற்றை எல்லாம் கவனமாக மனதில் ஏற்றி கொண்டு அந்த பெண்மணியிடமும் வைரத்தை விரைவாக அவரிடம் ஒப்படைப்பதாக வாக்களித்தான்.
யார் எடுத்திருப்பார்கள் என்னும் எண்ணத்திலேயே சிந்துபாத் அனைவரையும் ஆராய்ந்தான். அவன் நண்பர்கள் விவரம் தெரிந்த யாரேனும் எடுத்திருக்க கூடும் என்றனர். வெகுவாக யோசித்தான்.
இதற்கிடையில் கபடி போட்டி ஒன்றிற்கு தலைமை தாங்க வருமாறு அந்த ஊரின் மிக பெரிய செல்வந்தரான நஸ்ருதீனின் வீட்டிற்கு அவரை அழைக்க சென்றிருந்தான். அப்போது அங்கே வைரவியாபாரியை சந்திக்க நேர்ந்தது. செல்வந்தரின் வீட்டில் வைரவியாபாரி வருவது சாதாரணம் என்று எண்ணிக்கொண்டான்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது. இன்னும் வைரத்தை பற்றிய தகவல் இல்லாததால் அவன் வருத்தமுற்றான். அவன் நண்பன் ஒருவன் வைரவியாபாரியும் நஸ்ருதீனும் மிகவும் நெருங்கிவிட்டார்கள் போலும் அடிக்கடி சந்தித்து கொள்கிறார்கள் என்ற தகவலை வழங்கினான்.
அன்று அவரின் வீட்டில் நஸ்ருதீனின் முகமும் வைரவியாபாரியின் முகமும் எதோ சரி இல்லாமல் இருந்ததை நினைவு கூர்ந்தான். இதை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீர்மானம் கொண்டான். விசாரணையை நஸ்ருதீனிடமே நேரடியாக தொடங்கினான். சிந்துபாதின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறி தான் போனார் அந்த செல்வந்தர்.
சிந்துபாத் களமிறங்கிய செயல் நன்மையில் தானே முடியும் விற்க ஏற்பாடு செய்திருந்த வைரக்கற்களை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.
தன்னிடமிருந்து வைரக்கற்களை சிந்துபாத் பெற்றுச்சென்றதில் ஆத்திரம் அடைந்தார்.
அவனை ஓரு குகையில் அடைத்து வைக்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவிட்டார். நாளை நான் நேரில் வந்து அவனிடம் இருந்து வைரக்கற்களை பெற்றுக்
கொள்வதாகவும் கூறினார். அதன் படி சிந்துபாத் குகையில் அடைத்து வைக்கபட்டான்.
அங்கிருந்து தப்பிக்க வழி தேடி கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக தனிமையில் அவன் சிக்கிக்கொண்டதையும் தப்பிக்க வலி இல்லாமல் திணறுவதையும் எண்ணி நொந்துகொண்டான்.
என்ன செய்வது என்று புரியாமல் வைரக்கற்களிடம் அவனின் கதையை கூறிக்கொண்டிருந்தான்.
திடீரென்று வைரக்கல்லில் இருந்து ஒளி பிரகாசமாக வீச தொடங்கியது. சிந்துபாத்தும் அதிர்ச்சியுற்றான். வைரத்தின் ஒளி அவன் தப்பி செல்ல வழியை காட்டியது. அவனும் மிக்க மகிழ்ச்சியுடன் முன்னேறினான். அப்பொழுது தான் அந்த பெண்மணியின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தது அவர் அந்த வைரக்கள்ளினை முன்னோர்களின் ஆசீர்வாதம் என்று கூறியது.
அடுத்த நாள் காலை அந்த பெண்மணியை சந்தித்து வைரக்கற்களை ஒப்படைத்தான். அவர் அவனை ஆரத்தழுவி கண்ணீருடன் அணைத்து கொண்டார்.
இக்கதையின் மூலம் நான் கூற வருவது இரண்டு விஷயங்களே
முதலாவது நம்மிடம் உள்ளவற்றில் நாம் திருப்தி அடைதல் வேண்டும். அடுத்தவரின் பொருட்களுக்கு என்றுமே ஆசைப்படுதல் கூடாது.
இரண்டாவது ஆசீர்வாதங்கள் என்பது மிகவும் பெரியது நம் வாழ்வில் மிக உயரிய சொத்தும் கூட.
நமக்கு கிடைத்துள்ள வாழ்வை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். முடிந்தவரை பிறர்க்கு உதவி புரிந்து அதில் மகிழ்ச்சி காணுதல் வேண்டும்.