STORYMIRROR

தூரா துளசிதாசன்

Others

5  

தூரா துளசிதாசன்

Others

எங்கே எனது வகுப்பறை

எங்கே எனது வகுப்பறை

1 min
279

கலகலப்பான வெடிச்சத்தம் 

காணாமல் போனது...

தீநுண்மியால் காலச்சக்கரம்

செல்லரித்து ஓராண்டாக

நீடித்தது இலையுதிர்காலம்...

வண்ணத்துப்பூச்சிகளின் வாசம்நுகரா

பூவனஞ்சோலையொன்று காட்சியளித்தது

நிறமியில்லா முதுமையோடு...!


மலர்களோடு பேச்சுவார்த்தை

இல்லையெனில்

பூஞ்சோலையில் புன்னகையேது..?

மகரந்தப்பைகளை தேடி

தேடியே வெப்பக்காற்றில்

உமிழ்நீரும் வற்றியது...

மலர்களில்லா பாலைவன

மெங்கும் சுற்றித்திரிகிறேன்

நிழலை தொலைத்த வண்டாக...!


கரும்பலகை தீண்டாத

சுன்னக்கட்டிகள் கறைபிடித்துவிட,

உயிரோட்டமான வகுப்பறையின்

வாயில் முடங்கியதால்

இலக்குகளன்றி பயணமானது

இணையக்கல்வி...

துருப்பிடித்த புல்லாங்குழல்களின்

உயிர்நாதம் மீட்டிட வழியன்றி

காற்றின் கைப்பிடித்த

குயிலொன்று ஊமையானது...!


எழுதுகோலை தொலைத்து

எதிர்காலம் ஓடையென

எண்ணிய கயல்கள்

தினக்கூலியாய் மாறிவிட,

எரியாத கரித்துண்டுகளின்

எதிர்காலம் என்னவாகுமென்று

விண்மீன்களை தொலைத்த

வானமாய் மௌனித்து 

அழுகிறது மனம்...!


சப்தமில்லா வகுப்பறையெங்கும்

நிசப்தம் நிலவிட

விசுப்பலகையும் மேசையும்

விம்மி விசும்பியது...

சாய்வு நாற்காலியில்

தனிமையோடு நான்...

வெளிச்சமில்லா இருண்டதேசத்தில்

அங்குமிங்கும் அகதியாய்

அலைந்தது மனப்பறவை...!


மலைமுகடுகளின் பிளவுகளில்

முத்தமிடும் நீரோடையின்

சலனத்தில் மூச்சுவிடும்

நொச்சிக் கொடியாய்...

உயிர்ப்பு பெறக்காத்திருக்கும்

பள்ளிக்கட்டிடத்தின் தூண்களில் 

எதிர்காலத் தூண்களின் 

வரவை யெண்ணி

காத்திருக்கும் ஆசிரியர்களில்

நானும் ஒருவன்...!


Rate this content
Log in