காணவில்லை
காணவில்லை


நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஒன்றியம் இருகூர் ஊராட்சிக்குட்பட்ட பஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடு வழங்குமாறு விண்ணப்பித்தார்.
அதனை ஆய்வு செய்த அதிகாரிகள் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு பெறுவதற்கான தகுதி அட்டையை வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து வீடு அமைப்பதற்கான அடிப்படை பணிகளை செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இதனையடுத்து கடன் வாங்கி அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை முருகேசன் மேற்கொண்டார். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான நிதி வரும் எனக் காத்திருந்தார். 9 ஆண்டுகள் முடிந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் வழக்கம்போல் அதிகாரியைச் சென்று சந்தித்த முருகேசனிடம் அவருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டு விட்டதாகவும் இனி நிதி வழங்க இயலாது எனவும் கூறி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முருகேசன், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்துக்குச் சென்று அதிகாரிகளால் கட்டிக்கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது வீட்டைக் காணவில்லை என்றும் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளார்.