சத்தியத்தை மீறிய கணவர்
சத்தியத்தை மீறிய கணவர்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
சத்தியத்தை மீறிய கணவர்; 2 நாள்களாகப் பேசவில்லை' - கணவரை மிரட்ட விபரீத முடிவெடுத்த காதல் மனைவி
சென்னை மதுரவாயலில் சத்தியத்தை மீறி, புகைபிடித்த கணவரை மிரட்ட தீக்குளித்த காதல் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த கணவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சென்னை மதுரவாயல், ஜானகிநகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவரின் மனைவி எஸ்தர் (27). இவர், கடந்த 12-ம் தேதி தீக்குளித்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்குபதிந்து விசாரித்தனர்.
மருத்துவமனையின் தீக்காய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ்தர், அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் என் கணவர் தாமஸ் மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறேன். என் கணவர் தாமஸ், சொந்தமாக கார் ஓட்டிவருகிறார். நானும் தாமஸும் காதலித்துப் பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் ராயபுரம் சர்ச்சில் 10.12.2014-ல் திருமணம் செய்துகொண்டோம்.
எங்களுக்கு ஆண்டனி இன்பேன்சியா (5), அர்லின் டோனா (3) என இரு பெண் குழந்தைகளும் மெவின் என 6 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். என் அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள நந்திவரம் கிராமத்தில் குடியிருந்துவருகின்றனர். என் கணவர் தாமஸ் என்னை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் உடனே சமாதானம் ஆகிவிடுவோம்.
எனது திருமணத்தின்போது என் தாய், தந்தையர் எனக்கு நகை, பணம் எதுவும் கொடுக்கவில்லை. என் கணவரும் நகை பணம் எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதுசம்பந்தமாக எங்களுக்குள் இதுவரை சண்டை வந்ததில்லை. என் கணவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. நான் அது சம்பந்தமாக அவரிடம் கடந்த ஆண்டு சண்டை போட்டதிலிருந்து புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்.
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் மீண்டும் என் கணவர் புகைபிடிக்க ஆரம்பித்தார். புகைபிடிக்க மாட்டேன் என்ற சத்தியத்தை அவர் மீறியதைப் பார்த்த நான் அவரிடம் சண்டை போட்டேன். அவர் என்னிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் நாங்கள் இருவரும் இரண்டு நாள்களாக பேசிக்கொள்ளவில்லை. 12.5.2020-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் என் கணவர் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். நான் அப்போது வீட்டில் வாங்கி வைத்திருந்த டீசலை எடுத்து என் கணவரிடம் காட்டி, `இனிமேல் நீ புகைபிடித்தால் நான் இதை ஊற்றி கொளுத்திக் கொண்டு செத்துவிடுவேன்' என்று கூறினேன்.
அதற்கு அவர், `நான் இனிமேல் புகைபிடிக்க மாட்டேன்' என்று கூறினார். ஆனால், நான் அவரை பயமுறுத்த வேண்டும் என்பதற்காக கையில் வைத்திருந்த டீசலில் சிறிதளவு எடுத்து நான் அணிந்திருந்த நைட்டியின் மேல் ஊற்றி பற்ற வைத்தேன். ஆனால், நைட்டி தீப்பிடித்தவுடன் தீ வேகமாகப் பரவி என் உடல் முழுவதும் எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் கணவர் உடனே என் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றார்.
அங்கு என்னை தீக்காய வார்டில் சேர்த்து எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். என் கணவரை பயமுறுத்துவதற்காக நான் வைத்துக் கொண்ட தீயினால் எனக்கு தீக்காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகிறேன்" என்று கூறியுள்ளார்.
எஸ்தர்,அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மனைவி தீக்குளித்த மனவேதனையிலிருந்த தாமஸ், வீட்டில் தூக்கில் தொங்கினார். அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையில் சிகிச்சையிலிருந்த எஸ்தர், உயிரிழந்தார்.
மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``எஸ்தரின் இடது கையில் தீக்காயம் உள்ளதால் அவரின் வலது கை பெருவிரல் கைரேகை பெற்றுள்ளோம். எஸ்தர், உயிரிழந்த சூழலில் தாமஸும் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் 2 சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.