வேலெடுத்த அண்ணனெங்கே?
வேலெடுத்த அண்ணனெங்கே?
ராக்கியுண்டு என்னிடம், ராஜனெங்கே?
ராசக்ரீடை செய்தவன் சொந்தமெங்கே?
ஆக்குமன்பு என்னிடம், அண்ணனெங்கே?
அருள்சுரக்க வேலெடுத்த மன்னனெங்கே?
காக்கவென்று ரக்ஷையுண்டு, கைகளெங்கே?
கருணைமழை பொழியுமந்தக் கண்களெங்கே?
ஏக்கத்துடன் நானிங்குண்டு, ஈசனெங்கே?
எத்தனைநாள் காத்திருப்பேன்? பாசமெங்கே?
கேள்விகள்தாம் பலவுண்டு, பதில்களெங்கே?
கூரையுண்டு, தரையுமுண்டு, மதில்களெங்கே?
வேள்விசெய்ய இடமுண்டு, நெருப்பெங்கே?
விரைந்துவரும் கடமையுண்டு, பொறுப்பெங்கே?
தூற்றுகின்ற வாய்களுண்டு, தூதரெங்கே?
தூக்கியென்னை நிறுத்தும்குரு நாதரெங்கே?
ஏற்றுகின்ற தீபமுண்டு, ஜோதியெங்கே?
ஏத்துமனம் தேடிடுதே, ஆதியெங்கே?
எங்குமவன் உண்டென்றால் என்னிலெங்கே?
இங்குமவன் உண்டென்றால் கண்ணிலெங்கே?
தங்குகின்ற இடமெங்கே? நிலைப்பதெங்கே?
தங்கைகையில் ராக்கியுண்டு, தலைவனெங்கே?