மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 6
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 6
அத்தியாயம் 6
பட்டப் பகலில் பயங்கரம்!
மாடர்ன் பங்களாவை மதன்லால் ஹோட்டலாக மாற்ற கட்டிட காண்ட்ராக்டர் பிரசாந்திடம் சென்று ஆலோசனை செய்தார். பூட்டப்பட்ட மாடர்ன் பங்களா திறக்கப்பட்டது மதன்லாலும் பிரசாந்தும் உள்ளே சென்று பார்த்தனர். மலை உச்சியில் இருந்து கீழிறங்கும் வண்ணம் படிக்கட்டுகளும் அடுக்கடுக்காக தளங்களும் அமைந்த மாடர்ன் பங்களாவை சீரமைக்க ஏற்பாடுகள் தொடங்கியது. பெயிண்ட் அடிப்பது, மரச்சாமான்களுக்கு வார்னிஷ் அடிப்பது, அலங்கார விளக்குகளை தூசி தட்டி சுத்தம் பண்ணுவது, மழைக்காலத்தில் நீர் வடிந்து பழுதான மின் வயர்களைச் சீரமைப்பது போன்ற வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மாலை ஐந்து மணியளவில் புறப்பட்டு பங்களாவைப் பூட்டிவிட்டு அனைவரும் சென்று விடுவர். இரவில் அங்கு யாரும் தங்குவதில்லை.
ஒரு நாள் பகல் மதிய உணவு நேரத்தில் வேலை செய்யும் ஆட்கள் சாப்பிடுவதற்காக வழக்கம்போல் தத்தம் வீடுகளுக்கு அல்லது பக்கத்தில் உள்ள உணவு விடுதிக்கோ சென்றுவிட சிலர் மட்டும் மலை உச்சியில் வரவேற்பறையில் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டு தாங்கள் கொண்டுவந்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அங்கு வேலைக்கு அமர்த்தபட்ட எலக்ட்ரீசியன்களில் ஒருவன் ஸ்டீபன். கல்யாணமாகாத வாலிபன்; ஊட்டி கான்வென்டில் படித்ததால் ஆங்கிலம் சரளமாகப் பேசுவான். மின் வயர்களைச் சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டதால் வேலையை முடித்துவிட்டு சாப்பிட வருவதாகத் தன் நண்பர்களிடம் கூறினான்.
பால்கனி அமைந்த தளத்தை பயணிகள் தங்கும் அறைகளாகப்பிரித்து உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு அறையிலும் கட்டில்கள், மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது. ஒரு அறையில் தான் வேலை முடியும் நிலையில் இருந்ததால் ஸ்டீபன் வேலையை முடித்துவிட்டு சாப்பிட நினைத்தான். திடீரென ஸ்டீபனின் அலறல் ஒலி கேட்டது.மேல்தளத்தில் வரவேற்பறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அனைவரும் அலறி அடித்துக் கொண்டு படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி ஓடி வந்து பார்த்தனர். எலக்ட்ரீசியன் அறையில் இல்லாததைக் கண்டு பால்கனி பக்கம் சென்று கீழே பார்த்தனர். பங்களாவின் தரைத்தளத்தில் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு திகைத்தனர்.
மலைத்தோட்டங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், குடியிருப்புகளில் வாழும் மக்கள் அனைவரும் அலறல் கேட்டு ஆடிப் போய் பங்களாவை நோக்கி ஓடிவந்தனர். ஸ்டீபனின் உடலைச் சுற்றி நின்ற அனைவரும் செய்வதறியாது நின்றனர். நண்பர்களில் ஒருவன் அதிகாரிகளிடம் விவரம் தெரிவிக்க ஓடினான். கூட்டத்தில் நின்ற வயதான ஒருவர் பேய் பலி வாங்கி விட்டதாகக் கூறினார். படித்த பகுத்தறிவாளர்கள் சிலர் அவர் பேச்சைப் புறக்கணித்துவிட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தனர். அதிகாரிகள் போலீசுடன் வந்தனர். போலீஸ் தற்கொலையாக இருக்குமோ என யோசிக்க நண்பர்கள் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொன்னார்கள். வேலை செய்யும் போது தவறுதலாக கீழே விழுவதற்கும் வாய்ப்பு இல்லை என யோசிக்க, பின்னர் இது எப்படி நடந்தது ?
மர்மம் தொடரும்........