மீண்டும் வருவாயோ காதலே(கவிதை)- செ.பாரத் ராஜ்
மீண்டும் வருவாயோ காதலே(கவிதை)- செ.பாரத் ராஜ்
உன்னை பற்றிய
கவிதை ஒன்றெழுத
வார்த்தைகள் பல இருந்தும்
வாக்கியம் வரவில்லை எனக்கு
காரணம்-
உன்மேல் நான் கொண்ட காதலும், அதனால் என்னுள்
உன்னால் ஏற்பட்ட காயமும்.
உன்னை நினைத்து பார்த்தால்,
வலியோடு வடிகிறது
கண்ணீர் கண்ணில்
அதை
துடைக்கும் கைக்குட்டை
கையில் இருந்தும்,
நனைந்து போகும்
என் தலையணையாய்
மீண்டும் வருவாயோ
மீதமுள்ள என் உடலை
விறகில்
எரிக்க..,
ஆயிரம் வார்த்தைகள் பேசினோம்
வருங்கால வாழ்க்கைப் பற்றி
சில நேரம்
உன் மடியில் நானும்
சில நேரம்
என் மடியில் நீயும்
தோ.,
அந்த மரத்தின்
உதிரும் இலைகளின் நிழலில்
நீ எனக்கு அணிந்துவிட்ட
மோதிரத்தின் அடையாளம்
இன்றும் என் விரலில் தென்படுகிறது
அதை மறைக்க
மீண்டும் வருவாயோ
மீதமுள்ள என் உடலை
சவப்பெட்டியில்
அடைக்க…
கல்லூரி கான்கிரீட் சாலையில்
கைக்கோர்த்து நடந்த
நம் கால்கள்
கடந்தது எத்தனை மைல்களோ
பிறர் பார்க்க
நான் உன்னையும்
நீ என்னையும்
பார்த்து கழித்த
நாழிகைகள் தான் எத்தனை
கல்லூரி இடைவேளையில்
நாம் ஒன்றாக
கேட்டு கழித்த
காதலைப் பாடும்
காதல் பாடல்கள் தான் எத்தனை
அந்த பாடல்களில்
இன்றும் நினைவுப்படுத்தபடும் நீ
மீண்டும் வருவாயோ,
மீதமுள்ள என் உடலை
பிணம் தின்னிகளுக்கு
இரையாக்க..