ஞாயிறுதோறும் சிறுகதை-கதை 9 தீபாவளி
ஞாயிறுதோறும் சிறுகதை-கதை 9 தீபாவளி
நன்னடத்தை என்பது வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. வீட்டில், நண்பர்கள் மத்தியில், அக்கம்பக்கத்தினர் மத்தியில், உறவினர்கள் மத்தியில், விழாக்காலங்களில், பண்டிகை சமயங்களில் என ஒவ்வொரு சமயத்திலும் நன்னடத்தையை கடைபிடித்ததால் தான் கதையில் வரும் அரசாங்க அதிகாரி உயர்ந்த பதவியை வகிக்கிறார்.இதனால் அவர் குடும்பம் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்திருந்தது.
மதுரையின் உயர்ரக பல அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்த கட்டிடத்தில் எல்லாவித வசதிகளுடன் இந்த குடும்பத்தினர் வாழ்கின்றார்கள். தீபாவளி தினத்தன்று அவர்கள் அடுக்குமாடி வீடு வண்ண விளக்குகளால் ஒளிரும். அங்கு வாழும் மக்கள் தத்தம் வீட்டிலிருந்து இனிப்புகள்,பழங்கள், வண்ணக் காகிதங்களால் சுற்றப்பட்டு அழகாக பேக் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் என இவைகளை எடுத்துக் கொண்டு அடுத்தவர்கள் வீடுகளுக்குச் சென்று தீபாவளி வாழ்த்துகள் கூறி கொடுப்பதை மிகப் பெரிய கௌரவமாக நினைப்பர்.
இன்றைய காலகட்டத்தில் உயர் அரசாங்க அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு தீபாவளி பரிசு கொடுப்பது கட்டாயம் என எண்ணப்படுகிறது. எனவே இக்கதையின் நாயகன் ஒரு அரசாங்க உயர் அதிகாரி என்பதால் அவர் வீட்டிற்கு தீபாவளி பரிசு பொருட்களை கொண்டு வரும் அனைவரையும் வரவேற்று வாழ்த்து சொல்வதோடு அவர்கள் தரும் பரிசுகளை வாங்கி வைக்க வேண்டி உள்ளது.அவர்கள் வீட்டு வேலைக்காரி துர்காவிற்கு இது ஒரு வியப்பான விஷயம். பரிசுப் பொருட்களை தன் எஜமானி அம்மா அலமாரியில் அடுக்கி வைக்கச் சொல்லும் போது அவள் மிகவும் ஆவலுடன் குதூகலத்துடன் அந்த வேலையைச் செய்வாள்.
வேலைக்காரி துர்கா வீட்டை மெழுகி கோலம் போட்டு, பூஜை அறை சாமான்களை நன்றாக துலக்கி,கடைக்குச் சென்று பூஜைக்கான சாமான்கள் அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்கி வந்து, மிகவும் சிரத்தையாக எஜமானி அம்மாவிற்கு அடுப்பங்கரையில் உதவி செய்து, பண்டிகைக்கான காரணகாரியங்கள் அறியாத நிலையிலும் கூட தன் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருந்தாள்.
மெதுவாக தன் மனதில் எழுந்த கேள்வியை எஜமானி அம்மாவிடம் கேட்டாள்,” இந்தப் பரிசுகள் எல்லாம் பூஜை சாமான்கள் தானேம்மா? பூஜைக்காக இவைகளைக் கொண்டு வருகிறார்களாம்மா?” என வெகுளியாகக் கேட்டாள். எஜமானியம்மாள் மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்,”இந்தப் பட்டிக்காட்டுக்கு இதெல்லாம் எங்கே புரிய போகுது! இந்த பரிசு பொட்டலங்களில் எத்தனை விதமான விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும்……வெள்ளி கிண்ணங்கள்,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்ணாடி டின்னர் செட்,அலங்கார விளக்குகள், சின்னச்சின்ன வைர மோதிரங்கள்……….இப்படி எத்தனையோ…………..
கொஞ்ச நாட்களாக அதிகாரியின் மனதில் பயம் ஏற்பட ஆரம்பித்தது. எந்த நேரத்தில் எந்த பூதம் எப்படி கிளம்புமோ என்று…… பாரத நாட்டின் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த எம்பி, மந்திரிகள், எம்எல்ஏ, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவருக்கும் அரசாங்கமே அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பல வசதி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஆனாலும் சில சமயங்களில் அந்த வசதி வாய்ப்புகளை அனுபவிக்கும் போது ஒருவித பயமும் அவர்களுக்குள் தோன்ற ஆரம்பிக்கிறது.
உயர் அதிகாரிகளிடம் அனைவரும் சகஜ பாவனையில் பழகுவது போல் தோன்றினாலும் கதையில் வரும் அதிகாரியின் நண்பர் மோகன்லால் போல் சிலரையும் நாம் நம் வாழ்க்கையில் பார்க்கத்தான் செய்கின்றோம். வேலையில் சேர்ந்தபோது உயர் அதிகாரி மிகவும் எளிமையாக இருப்பார். தீபாவளி என்றால் மண்ணால் செய்த லட்சுமி பொம்மை வைத்து, நாலணா விற்கு பூமாலை வாங்கி, எளிமையாக பட்சணம் செய்து, மிகவும் மன மகிழ்ச்சியுடன் பண்டிகை கொண்டாடுவார்கள்.
நண்பர் மோகன் லால் அதிகாரிக்கு நட்பின் அடையாளமாக அரை கிலோ எடையுள்ள வெள்ளி லட்சுமி சிலையை போன தீபாவளியன்று பரிசாக வழங்கினார். அதன்பின்னர் வீட்டில் பூஜை அறையில் ஆடம்பரம் நுழைந்து விட்டது. ஆடம்பரம் நுழைந்ததால் அமைதி தொலைந்தது. இந்த வருடம் நண்பர் மோகன்லால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல வரவில்லை. அதிகாரி அமைதி இன்றி தவித்தார். எஜமானி அம்மாள் பூஜையை ஆரம்பிக்க இயலவில்லை. குழந்தைகள் குழப்பத்துடன் அம்மா அப்பா முகம் நோக்கி அமைதியாக அமர்ந்து இருந்தார்கள்.
வேலைக்காரி துர்காவின் வேலை முடிந்ததால் எஜமானியம்மா அவளுக்கு ஸ்வீட் பாக்ஸ், பட்டாசுகள்,புதுத்துணி,தீபாவளி காசு என வழக்கம்போல் கொடுத்து அனுப்பினாள். அதிகாரி வீட்டில் அலங்கார விளக்குகள் இருந்தாலும் அங்கே பண்டிகை நடக்காமல் அமைதி நிலவியது. ஆனால் அதே நேரத்தில்……….. வேலைக்காரி துர்கா வீட்டில் அகல் விளக்கின் ஒளியில் அவள் குடும்பத்தினர் அனைவரும் இனிப்புகளை பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் துர்காவின் குழந்தைகள் ஆரவாரத்துடன் ஓட்டு வீட்டின் வெளியே பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.