இதயத்தில் ஓர் இசை...! பாகம் 2
இதயத்தில் ஓர் இசை...! பாகம் 2
இதயத்தில் ஓர் இசை...!
பாகம் 2
வாழ்க்கை சில சமயங்களில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும். வினிதாவின் வாழ்க்கையும் அப்படித்தான். அவள் முதல் வருடம் சட்டம் படிக்கும் போது திடீரென அவளது தந்தையின் மறைவு அவள் குடும்பத்தை உலுக்கிப் போட்டுவிட்டது. ஒரு மாத காலம் அவளுடைய அம்மா அழுகையை நிறுத்தவேயில்லை. இதே அழுகையின் மூலமும், இதே கண்ணீரின் மூலமும் நிறையக் காரியங்களை அவள் தந்தையிடம் அவள் அம்மா சாதித்துக் கொண்டிருந்தாலும் அவரது இழப்பை அவள் அம்மாவால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. அவள் தந்தை இருந்த வரை குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொண்டார். மஞ்சு மெடிசின் சேர்ந்ததும் மிகவும் பெருமைப் பட்டார். ஆனால், வினிதா படிப்பில் நாட்டம் கொள்ளாமல் சமூக சேவை, மரம் நடுதல், மெடிக்கல் கேம்ப்களில் வாலன்டியராக உதவி செய்தல் போன்ற பொது நலச் செயல்களிலேயே தன் கவனத்தைச் செலுத்தியது அவருக்குச் சற்று கவலையளிக்கத்தான் செய்தது.
தன் தந்தையின் கவலையைப் போக்குவதற்காகவே வினிதா சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். இவள் கல்லூரியில் சேர்ந்தவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவருக்குப் பின் கல்லூரியை விட்டு விலகி விட்டாள். இப்போது அவள் தந்தை இருந்து இருந்தால் மிகவும் வருத்தப் பட்டிருப்பார். இவ்வளவு சக்சஸ் ஃபுல்லான ஒரு ஃபேமிலியில் இப்படி ஒரு பெண் இருந்தால் யாருக்குத்தான் வருத்தம் இல்லாமல் இருக்கும்? வினிதாவின் தந்தை ஏகப்பட்ட சொத்துக்களை அவளுக்கு விட்டுவிட்டுச் சென்றிருந்தாலும், அவள் அதிலிருந்து ஒரு நயா பைசா கூடத் தொடுவதில்லை. அவள் தேவைகள் மிகவும் குறைவு என்பதால் அவள் சம்பாத்தியத்திலேயே வாழக் கற்றுக் கொண்டிருந்தாள்.
வினிதா விசாலமான மனதைக் கொண்டிருந்தாள். அந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பல உதவிகள் செய்திருக்கிறாள். குழந்தைகளைக் குளிப்பாட்டுவதிலிருந்து, அந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது தேவையெனில் ஓடி ஓடி உதவிகள் செய்வாள். இதுவரை லட்சக்கணக்கான மரங்கள் நட்டிருக்கிறாள். புளூ கிராஸில் மெம்பர். அவள் இதயம் புனிதமானது. அன்பு நிறைந்தது. அந்த அன்பை அத்தனை உயிர்களுக்கும் வாரி வழங்குவாள். அவளுக்குப் பொருள்கள் மேல் எந்த ஆசையும் கிடையாது. சக மனிதனை நேசிக்காமல், அனைவரிடத்திலும் அன்பு செலுத்தாமல் வாழும் வாழ்க்கை பயனற்றது என்று நினைப்பவள். அன்பு செலுத்துவதையும், ஒழுக்கத்தையும் தன் இரு கண்களாகக் கருதுபவள் அவள்.
மஞ்சு தன்னுடைய பதினேழாவது வயதில் வீட்டில் திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். ப்ளஸ் டூவில் தன் உடன் படிக்கும் பையன் ஒருவனைக் காதலிப்பதாகவும், தனக்குத் திருமணம் என்று ஒன்று நடந்தால் அவனுடன் தான் என்றும் கூறி அதிர வைத்தாள். வீட்டில் ஒரே களேபரம். வினிதாவிற்கு அப்போது பத்தொன்பது வயது. ப்ளஸ் டூ முடித்தவுடன் வினிதாவும் கல்லூரியில் சேராமல் சமூக சேவை என்று சுற்றிக்கொண்டு இருந்ததால் அவர்கள் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்தது. அவளின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான இன்ஃபாச்சுவேக்ஷனால் குடும்பத்தில் ஒரு மாத காலம் கவலை சூழ்ந்தது. நல்ல வேளையாக அந்தப் பையன் ஒரு டிரக் அடிக்ட் என்பதை அவளது தந்தை மஞ்சுவிற்குப் புரிய வைத்ததும், அவளின் மனதில் அமைதி திரும்பியது. அதன் பின் செமயாகப் படித்து ப்ளஸ் டூவில் ஸ்டேட்டில் எய்த் ரேங்க் வாங்கி, எம் எம் சி யில் மெடிசின் ஜாய்ன் பண்ணி விட்டாள். அதன் பிறகு வீடே வினிதா பக்கம் திரும்பியது. தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகவே வினிதா சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். மஞ்சு இப்போது ஒரு சர்ஜனைத் திருமணம் செய்து கொண்டு லீடிங் கைனகாலஜிஸ்டாக உலா வருகிறாள். அதனால், வீட்டில் அனைவருக்கும் வினிதாவின் வாழ்க்கை பற்றித்தான் இப்போது பெரிய கவலை.
வினிதா இங்கு வந்து தங்கியிருப்பதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்கிறது. சட்டக் கல்லூரியில் அவள் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆன பிறகு ஒரு நாள் தீரனைச் சந்தித்தாள். யாரோ ஒரு தெர்ட் இயர் ஸ்டூடன்ட் இவளிடம் தகாத முறையில் நடக்க முயலும் போது, அவன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது. திரும்பிப் பார்த்தால் ஆறடி உயரத்தில் அழகான ஒரு இளைஞன்.
"இவன் இனிமேல் உங்களிடம் வாலாட்ட மாட்டான். தைரியமாகச் செல்லுங்கள்", என்றான்.
வினிதா பதட்டத்துடன் இருந்த படியால், அந்த இடத்தை விட்டு உடனே ஓடி வந்து விட்டாள். பிறகு தான் அவளுக்கு உறைத்தது, தான் அவனுக்கு ஒரு நன்றி கூடச் சொல்லாமல் வந்துவிட்டோம் என்று. சே! என்ன ஜென்மம் நான் என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
அடுத்த நாள் மதியம் கேன்டீனில் அவனைப் பார்த்தாள். அவன் ஒரு சன்னலோர இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தான்.
இவள் அவனது டேபிள் அருகில் சென்றதும் நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான். வசீகரிக்கும் முகம். அழகான பல் வரிசை, அவன் புன்னகைத்த போது, கேன்டீனே வெளிச்சமானது போல் தோன்றியது. அவள் தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹலோ மிஸ், நேற்று பயம் இன்னும் தீரவில்லையா?"என்று அவன் கேட்டதும் தான் சுதாரித்துக் கொண்டு
"தே... தேங்க் யூ சார். நேற்று சொல்ல மறந்து விட்டேன். அதான்"
"சரி உட்காருங்கள். காஃபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்"
அவன் பேச்சிற்குக் கட்டுண்டவள் போல அமர்ந்தாள்.
"உங்கள் பெயர் என்ன?"
"வினிதா"
"மிகவும் அழகான பெயர் உங்களைப் போலவே"அவனின் யதார்த்தப் பேச்சிற்கு வெட்கப் பட்டாள்.
"என் பெயர் தீரன்", இவள் கேட்காமலேயே அவன் சொன்னான்.
அதன் பின்னர், இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இருவரும் தங்கள் கருத்துக்களை, ரசனைகளைப் பரிமாறிக் கொண்டனர். வாங்க, போங்க என்ற அழைப்புகள் மாறி வினி, தீரா என அவர்களது அழைப்புகள் பரிணாம வளர்ச்சி பெற்றது. இருவரும் தங்களுக்குள் காதலை உணர்ந்தார்கள். ஆனால், ஒருவருக்கொருவர் மனம் திறந்து சொல்லிக் கொள்ளவில்லை.
தீரன் தான் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லவும், வினிதா குஷியாகி விட்டாள்.
"சித்ரா பௌர்ணமி அன்று உன்னை என் போட்டில் அழைத்துச் செல்கிறேன்"
சித்ரா பௌர்ணமி வந்தது. அவனுடைய மீன் பிடிக்கும் போட்டில், இவள் கையைப் பற்றி ஏற்றி விட்டான்.
'உன் கண்களை மூடிக் கொள். நான் சொல்லும் போது தான் கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்"
போட்டை ஸ்டார்ட் செய்தான். சற்று நேரம் கழித்து,"இப்போது உன் கண்களைத் திறந்து பார்"
வினிதா ஆவலுடன் தன் கண்களைத் திறந்து பார்த்தாள்.
அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை.
அகன்று விரிந்த வானத்தில் ஜொலிக்கும் வெள்ளித் தட்டு போல நிலவு மிதந்து கொண்டிருந்தது. கடலின் மேற்பரப்பில் இருந்து பார்க்கும் போது நிலவு மிகவும் அருகாமையில் இருப்பது போல் தோன்றியது. சுற்றிலும் கடல். தனிமை. அருகில் அவள் விரும்பும் தீரன். காதல் கிறக்கத்தில், உணர்ச்சிகளின் தாக்கத்தில் அவள் தன்னை மறந்திருக்க, அவளின் அழகிய வதனம் நிலவொளியில் மின்ன, அவனும் காதலுடன் அவள் கன்னத்தில் முத்தமிட அவள் அருகில் வந்து, அவனுடைய உதடுகள் அவளது கன்னத்தை நெருங்கிய போது, சட்டென்று தன் இதழ்களையே அவனுக்குத் தந்தாள். திடீரென நிகழ்ந்த இந்த எதிர்பாராத உணர்வுகளின் வீச்சில் இருவரும் ஓர் உடல், ஓர் உயிர் ஆனார்கள்.
வினிதாவின் இருபத்து நான்காம் வயதில் தீரன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். வீட்டில் பயங்கர எதிர்ப்பு. எல்லாவற்றையும் மீறி தீரனின் கைபிடித்தாள் வினிதா.
தீரனும் சட்டப் படிப்பைத் தொடர வில்லை. தீரனுடன் ஒரு அம்சமான வாழ்க்கையை வாழ்ந்தாள் வினிதா...விதி விளையாடும் வரை.
-தொடரும்