இப்போதே ஆட்கொள்
இப்போதே ஆட்கொள்
கள்வா..
ஏனிந்த கட்டிலடங்கா எண்ண மாற்றம் தந்தாய்..
கட்டுடல் ஆணாகினும் கண்ணெடுத்தும் காணாதென் மனம், அதிலெப்படி ஆழப் புதைந்தாய்?
உன் வருகைக்காக காத்திருந்து, ஏங்கி, உடலுருகி,உறக்கமிழந்து
படுக்கையில் என்னை, தேனுண்ட போதை வண்டு பூவிதழில் உருளுவதைப் போல் ஆக்கிவிட்டாய்..!
நீ சொல்லும் "ஹாய்" கூட என் காதில், காதல் ஹைக்கூ பாடுகிறது..
கண்கள் விரித்து உனைப் பார்க்கும் என் நோக்கம் உனக்குப் புரியவில்லையா ?
கைகள் பிடித்து , கண்ணம் விரித்து காதல் சொல்ல நீ விரும்பவில்லையா ?
காத்திருந்து காத்திருந்து என் காலம் தான் என் உயிரைக் கரைத்துக் குடிக்கப் போகிறதா ? சீக்கிரம் வா , வந்தெனை ஆட்கொள்..
ஒரு நிமிடம்..
சீ சீ இதென்ன மாயை.. நானில்லை இவள்..
ஏதோ ஒருத்தி எனக்குள் புகுந்து என் மதியை மாற்றி என் வழியை மாற்றுகிறாள்..
இந்நிலை வெறுக்கிறேன்.. மனம் தீர வெறுக்கிறேன்.. ஆம்..என் அத்தனை நாடியிலிருந்தும் வெறுக்கிறேன்..!!
உடனே கட்டளையிடுகிறேன்.. காணாது போ நீ ..
இல்லை நீங்கள்..
அந்த இவளும், இவளின் அவனும்..
ஆம்.. போய் விடுங்கள்..
பிறகு நான் கண்ணீருக்கு இரையாகுவேன்..
பாலுக்கு ஏங்கும் குழந்தையாகுவேன்..
மதியிழந்த நிலையில் மொழியிலா பேதையாகுவேன்..
மரணம் வரை உருகிக்கொண்டிருப்பேன்
..
வேண்டாம்,
சொல் கள்வா, இது வேண்டாம் அல்லவா ?
எனக்கு இத்தனை துன்பங்களையும் தரும் அவ்வளவு கொடிய அரக்கனா நீ ?
இல்லை.. அப்படி ஒன்றும் நான் கேள்விப்படவில்லை..
நீ நல்லவன்..!
வந்தெனை அணைத்துக் காதல் பேசு..
உன் நல்லவன் பெயரை மற்றுமொரு முறை உறுதிப்படுத்திக்கொள்..!
வா.. வந்தெனை இப்போதே ஆட்கொள்...!!